புரோமோசனுடன் கன்னிவாடி பேரூராட்சிக்கு போக வேண்டியவர் இப்போ லஞ்சம் பெற்று கம்பி எண்ணுகிறார்.
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் சிலர் பட்டா பெயர் மாற்றம் செய்ய, பத்திரம் பதிவுச் செய்ய, மின் இணைப்பு பெற, குடிநீர் வரி, சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய, விதவையர் தொகை பெற, சொத்து வரி நிர்ணயம் செய்ய, பெண் குழந்தைகள் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கும் என்று பல்வேறு அரசின் சேவைகளை பெற, லஞ்சம் கேட்பதாக புகார்கள் உள்ளது. அப்படி அரசின் சேவைகளை பெற லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை பிடிப்பதற்காகவே ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவுத்துறை போலீஸார் இருக்கின்றனர். இது தனித்துறையாகும். 'இத்துறை முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் வரக்கூடியதாகும்.

இங்கு லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்கள் குறித்து புகார் அளித்தால், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவுப் போலீசாரால் ரசாயணம் பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை புகார் தாரரிடம் கொடுத்து லஞ்சம் கேட்கும் அதிகாரிகளை பொறிவைத்து அவர்களை கைது செய்து சிறையில் அடைப்பார்கள். மற்றும் துறை ரீதியாக பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். இப்படியான நடவடிக்கை கடந்த சில மாதங்களில் மட்டும் ஏராளமான அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து. கரூரில் ஒரு அரசு ஊழியர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவுப் போலீசாரிடம் லேட்டஸ்டாக சிக்கியுள்ளார். 

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பழைய ஜெயங்கொண்டம் சோழபுரம் பேரூராட்சி பூவம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேஷ். இவர் தனக்கு சொந்தமான 3 சென்ட் இடத்திற்கு சொத்து வரி நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.

அவரிடம் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜகோபால், அலுவலக உதவியாளர் சிவக்குமார் ஆகியோர் குமரேசை தொடர்பு கொண்டு சொத்து வரி நிர்ணயம் செய்ய வேண்டுமானால் ரூ.17 ஆயிரம் லஞ்சம் கேட்டார்களாம். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர், லஞ்சம் கொடுக்க விரும்பாத குமரேஷ் இதுகுறித்து திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவுப் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவுத்துறை டிஎஸ்பி மணிகண்டன் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், நேற்று ரசாயன பவுடர் தடவிய ரூ,17 ஆயிரத்தை ராஜகோபாலிடம், குமரேஷ் கொடுத்திருக்கிறார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், ராஜகோபால் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அலுவலக உதவியாளர் சிவக்குமார் ஆகியோரை கையும், களவுமாக பிடித்தார்கள். பின்னர் 2 பேரிடமும் அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து ராஜகோபால், சிவக்குமார் ஆகியோரை லஞ்ச ஓழிப்பு போலீசார் கைது செய்து வழக்குப்பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதியின் உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.

லஞ்ச வழக்கில் கைதாகியுள்ள செயல் அலுவலர் ராஜகோபால் பதவி உயர்வு பெற்று, திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி பேரூராட்சிக்கு பணி மாறுதலாக செல்ல இருந்தார். இந்த நிலையில் கடைசி கடைசி நாளிலே அலுவலகம் வந்த நிலையில் ராஜகோபால் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். பதவி உயர்வு கிடைத்த அரசு ஊழியர், டிரான்ஸ்ஃபர் ஆகும் கடைசி நாளில் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான சம்பவம் கரூர் மாவட்ட அரசு ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.