கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகர பகுதிகளில் அதிகமான தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையால், தொழிலாளர்கள் பலரும் பணத்தை இழந்து வருகின்றனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிற மாநில லாட்டரி சீட்டு விற்பனை அதிகரித்துள்ளது. இதில், குறிப்பாக ஓசூரில் தொழிலாளர்களை குறிவைத்து ஒரு எண் முதல் 4 இலக்கு எண் கொண்ட லாட்டரி சீட்டுகள் ரூ.25 முதல் ரூ.200 வரையில் விற்பனை செய்யப்பட்டுகிறது. இந்த லாரிட்டரிகள் பேருந்து நிலையம் சுற்றிலும், தொழிற்சாலைகளையொட்டி உள்ள பகுதிகள் மற்றும் தொழிலாளர்கள் தங்கி உள்ள குடியிருப்புகள், விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமோகமாக நடக்கிறது.
இதில் பலர் ஏஜென்ட்டுகளாக உள்ளனர். லாட்டரி சீட்டு குலுக்கல் மதியம் 1 மணிக்கு மேல் தொடங்கி இரவு 8 மணி வரை 4 முறை ஆன்லைனில் ரிசல்ட் வெளியாகிறது. இதனை விற்பனையாளர்கள் குறித்துக்கொண்டு லாட்டரி வாங்கியவர்களுக்கு டோக்கன் வழங்கி பரிசு விழுந்ததாக சிலரை அழைத்து கமிஷன் பெற்றுக்கொண்டு பணம் வழங்குவதை போல் நாடகமாடுகின்றனர்.
இதனை நம்பி பலர் கடன் வாங்கி லாட்டரி சீட்டு வாங்கி பணத்தை இழக்கின்றனர். இதனால் தொழிலாளர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். லாட்டரி விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆரவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.