போலி மருத்துவர்களையும், போலி மருத்துவமனைகளையும் ஒழிக்கும் : உயிரோடு விளையாடும் இதுபோன்ற சமூக விரோதிகளை கைது செய்து தண்டனை வாங்கி கொடுப்பதே நோக்கம்!
தென்காசி மாவட்டத்தில் பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில் இயக்குனர் நலப் பணிகள் மருத்துவர் பிரேமலதா தலைமையில் போலி மருத்துவர்களையும், போலி மருத்துவமனைகளையும் ஒழிக்கும் பணியை சிறப்பாக செய்து வருகிறார்.

 அதன் தொடர்ச்சியாக 22-08-2023 அன்று செவ்வாய்க்கிழமை ஆலங்குளம் தாலுகா, வீ.கே.புதூர் அருகே கழுநீர் குளம் பகுதியில் பாபு மெடிக்கல் பெயரில் போலி மருத்துவர் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் மாவட்ட மருத்துவ அதிகாரி மருத்துவர் பிரேமலதா அவர்கள், திடீர் ஆய்வு மேற்கொண்டார். 
   
 (22.8.2023 அன்று மாலை 4:45)  ஆய்வின்போது நோயாளிகளின் சிகிச்சைக்கு பயன்படுத்திய, பயன்படுத்தப்பட்ட ஊசி, மாத்திரைகள் மற்றும் பொருட்கள் கண்டறியப்பட்டது.
மருந்து கடை உரிமம் மட்டும் பெற்று கொண்டு, கிளினிக் நடத்திட மருத்துவ ஸ்தபன சட்டத்தின்படி பதிவு சான்று பெறாமல் மருத்துவம் பயிலாத நபர் அப்பாவி பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்கி, அப்பாவி பொதுமக்களின் உயிரோடு விளையாடும் இதுபோன்ற சமூக விரோதிகளை தடுக்கும் வகையில், மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர், மருத்துவர் அருள் ஜோதி, சுகாதார ஆய்வாளர்கள் அருண் மற்றும் ஆனந்தராஜ், தென்காசி இணை இயக்குனர் நலப் பணிகள் அலுவலக கண்காணிப்பாளர் மீனா, ரெவென்யு இன்ஸ்பெக்டர் மாலினி, VAO, மற்றும் காவல்துறை முன்னிலையில் கடை சீல் வைக்கப்பட்டது.

இந்த நடவடிக்கை குறித்து இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் பிரேமலதா அவர்கள் கூறும் போது,
பொதுமக்கள் மருத்துவம் பயிலாத இது போன்ற நபர்களிடம் சிகிச்சை பெறுவதை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் அரசு துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனை என சுகாதார கட்டமைப்பு சிறப்பாக தமிழகத்தில், குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் இந்த வசதியினை பயன்படுத்தி, உடல் நலம் பெற்று வளமோடு வாழ வேண்டும். போலி மருத்துவர்களை நாடி உடல் நலத்தை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.