இளையான்குடியில் கடன் வழங்காமலேயே 13 விவசாயிகளை கூட்டுறவு சங்கம் கடன்காரர்களாக்கிய சம்பவம்.?
சிவகங்கை மாவட்டம். இளையான்குடியில் கடன் வழங்காமலேயே 13 விவசாயிகளை கூட்டுறவு சங்கம் கடன்காரர்களாக்கிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இளையான்குடி பகுதியைச் சேர்ந்த 13 விவசாயிகள், ஆடு வளர்க்க கடன் கேட்டு, தமிழ்நாடு பிற்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தில் (டான்செட்கோ) விண்ணப்பித்தனர். அவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் கடன் வழங்க, 2018-ம்ஆண்டில் இளையான்குடி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டது.

ஆனால், விவசாயிகளுக்கு கடன் வழங்கவில்லை. 5 ஆண்டுகளாக அந்த நிதி கூட்டுறவு சங்கக் கணக்கிலேயே உள்ளது. கடன் தொகையை விடுவிக்கக் கோரி விவசாயிகள் பலமுறை கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அலுவலகம், மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலகத்தில் மனு கொடுத்தும், நடவடிக்கை இல்லை.

இதனால் விரக்தி அடைந்த விவசாயிகள், ஆடு வாங்குவதற்கான கடனையே மறந்துவிட்டனர். இந்நிலையில், அவர்களில் சிலர் ஆழ்த்துளைக் கிணறு அமைக்க கடன் கோரி, மீண்டும் டான்செட்கோவை அணுகினர்.

ஆனால், விவசாயிகளின் பெயரில் ஆட்டுக் கடன் இருப்பதாகவும், வட்டி நிலுவையும் செலுத்தவில்லை என்று கூறியதால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், கடன் நிலுவை இருப்பதால், இனி கடன் தர முடியாது என்றும் அதிகாரிகள் கைவிரித்துள்ளனர்.

இதுகுறித்து இளையான்குடி லட்சுமிபுரத்தைச் சேர்ந்த விவசாயி கன்னியப்பன் கூறும்போது, “கடன் பெறாமலேயே எங்களை கடன்காரர்களாக்கி விட்டனர். இனி எங்களுக்கு ஆட்டுக்கான கடனே வேண்டாம். அந்த நிதியைத் திருப்பி அனுப்பினாலே போதும். வேறு கடனாவது பெற்றுக் கொள்கிறோம்” என்றார்.

இதுகுறித்து சிவகங்கை கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ஜீனு கூறும்போது, “கூட்டுறவுச் சங்கக் கணக்கில் உள்ள நிதியை திருப்பி அனுப்ப, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறியுள்ளார்.