முன்னாள் அமைச்சருக்கு முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததால் சார் பதிவாளர் பணியிட மாற்றம்
ஆம்பூர். சார்பதிவார் இரமணன் வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பத்திர பதிவு அலுவலகத்திற்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்
இதுகுறித்து பதிவுத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘வேலூர் பதிவு மாவட்டத்தில் சார் பதிவாளராக இருந்த இரமணன் ஆம்பூரில் சார் பதிவாளர் பணி காலியாக இருந்ததால் அந்த பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டது. அப்போது அங்கீகாரம் பெறாத வீட்டு மனைகளை பதிவு செய்திருப்பது, மாவட்ட தணிக்கை பதிவாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து, இரமணன் அங்கிருந்து திரும்ப பெறப்பட்டு, தற்போது, வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு மண்டலத்தில் பத்திரப்பதிவு இல்லாத, நிர்வாக பிரிவிற்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அங்கீகாரம் இல்லாத வீட்டுமனை பதிவு செய்ததில், துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட உள்ளது’ என்றனர். முன்னாள் அமைச்சருக்கு வேண்டிய சார் பதிவாளர்
அதிமுக ஆட்சியில் அப்போதைய பதிவுத்துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணிக்கு, ஆம்பூர் சார் பதிவாளராக இருந்த இரமணன் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளார். இதனால் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் ஆம்பூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடாகவும், போலி ஆவணங்கள் வைத்தும் பத்திரப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது. அமைச்சருடன் தொடர்பில் இருந்ததால், அதிகாரிகளும். ஆம்பூர் பொறுப்பு சார் பதிவாளர் இரமணன் மீது அப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டியதாக கூறப்படுகிறது