குடிப்பழக்கம் உள்ள கணவரிடம் இருந்து மனைவிக்கு முழுமையான பாலியல் இன்பம் கிடைப்பதில்லை.
இருவருக்குமிடையேயான நம்பிக்கைத்தான் வாழ்க்கையை நிம்மதியாக்கும்
தங்கள் கணவருக்கு இரவில் மது அருந்தும் பழக்கம் இருப்பதாகவும், அது தரும் போதை தாம்பத்திய உறவுக்கு வலுசேர்ப்பதாகவும் அவர் சொல்கிறார். அது சரியா? தப்பா?' என்ற கேள்வியை திருமணமான பெண்களில் பெரும்பாலானவர்கள் தங்களிடம் எழுப்புவதாக, பாலியல் துறை சார்ந்த டாக்டர்கள் சொல்கிறார்கள். இரவில் மது அருந்தும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக கூறும் டாக்டர்கள், மேற்கண்ட கேள்விக்கு அளித்திருக்கும் பதில்: "மது அருந்தினால் தாம்பத்ய செயல்பாடு அதிகரிக்கும் என்பது தவறான நம்பிக்கை. தாம்பத்திய உறவு என்பது கணவன்- மனைவி இருவரின் மனமொத்த மகிழ்ச்சியான அனுபவம். உடல் அளவில் பார்த்தால், 'டெஸ்டோஸ்டிரான்' என்ற ஹார்மோன் அளவைப் பொறுத்தே இந்த செயல்பாடு அமைகிறது. இது ஆண்-பெண் இருவருக்கும் ஏறக்குறைய ஒரே வயதில் சுரக்கிறது. போதைப் பொருள்கள், உடலில் இந்த ஹார்மோனை வேகமாகச் சுரக்கச் செய்யும்தன்மை கொண்டவை. அவை இயற்கைக்கு மாறாக நரம்புகளைத் தூண்டிவிடுவதால், ஊக்க மருந்து உட்கொண்ட விளையாட்டு வீரர்களை போட்டிக்குகூட அனுமதிப்பதில்லை. அது போல் தாம்பத்ய உறவுச் செயல்பாடுகளில் மது சிலநேரங்களில் உணர்ச்சியைத் தூண்டினாலும் தொடர்ந்து பயன்படுத்தும்போது, உடல் மரத்துவிடத் தொடங்கும். போதைப்பொருள்கள் உணர்ச்சிகளைத் தூண்டுவதுபோல் தெரிந்தாலும் மன நிறைவை ஏற்படுத்தாது. மேலும், உச்சகட்ட நிலை ஏற்படுவதை தடுத்துவிடவும் செய்யும். சிகரெட் பிடிக்கும் ஆண்களால், அதிக வேகத்தில் தாம்பத்ய செயல்பாடுகளில் ஈடுபட முடிவதில்லை. அதேபோல், சிகரெட் பிடிக்கும் பெண்களுக்கு, உறவின்போது உறுப்பில் வழுவழுப்புத் தன்மையை ஏற்படுத்தும் திரவத்தின் அளவு குறைந்து வறட்சித்தன்மை ஏற்படுகிறது. இதற்கு, சிகரெட்டில் உள்ள 'நிகோடின்'தான் காரணம். மன உளைச்சலைக் குறைக்க உட்கொள்ளும் சில மருந்துகளுக்குக்கூட இந்தத் தன்மை உள்ளது. அப்படிப்பட்ட மருந்துகளை உட்கொள்ளும்போது பாலியல் செயல்பாட்டு ஆர்வம் குறைந்துபோகும்.
மது உடலின் நரம்புகளுடன் நேரடியாகத் தொடர்புகொள்வதால், முதலில் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால், நாள்கள் செல்லச்செல்ல, நரம்பு மண்டலத்தையே பாதிக்கச் செய்துவிடும். குறிப்பாக, அதிக அளவில் மதுவை உட்கொள்ளும்போது, அவர்களை மயக்கம் அடையச் செய்து என்ன நடக்கிறது என்ற உணர்வே ஏற்படாத அளவுக்கு மாற்றிவிடுகிறது. உறவில் உச்சக்கட்டத்தை உண்டாக்கும் நரம்பு மண்டலத்தை மது நேரடியாகவே தாக்குகிறது. அதனால் அவர்களுக்கு பாலியல் ஆர்வம் அதிகம் இருக்கும். ஆனால் இயக்கம் வெகுவாக குறைந்துவிடும். தாம்பத்திய செயல்பாடுகளில் கணவன்- மனைவி இருவரும் தங்கள் விருப்பங்களைத் தெளிவான முறையில் பரஸ்பரம் தெரிவித்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஆனால், மது அருந்திய ஆண், அவரது ஆசையை மட்டும் தீர்த்துக்கொள்ள முயற்சிப்பாரே தவிர, தன்னுடைய இணையின் ஆசைகளைத் தெரிந்துகொள்ளும் மனநிலையில் இருக்க மாட்டார். அதனால், குடிப்பழக்கம் கொண்ட ஆண்களிடம் இருந்து பெண்களுக்கு முழுமையான பாலியல் இன்பம் கிடைப்பதில்லை. குடிபோதையில் மிகச்சிறப்பான முறையில் பாலியல் இன்பத்தை அனுபவித்ததாக ஆண்கள் நினைத்துக்கொள்ளலாம். ஆனால் உண்மை அதுவல்ல. அதனால், பாலியல் உறவில் நிறைவைப்பெறவிடாமல் தடுக்கக்கூடிய காரணிகளில் ஒன்றான போதைப் பொருள்களைத் தவிர்ப்பது பாலியல் உறவுக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும் பயன் அளிக்கக்கூடியதாகும். தாம்பத்ய இன்பத்துக்காக மதுவை பயன்படுத்துவதில் இன்னொரு அபாயமும் இருக்கிறது. அதாவது, மது உபயோகித்து உறவுகொள்பவர்களால் குறிப்பிட்ட நாள்களுக்குப் பிறகு போதைப்பொருள்கள் இல்லாமல் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடவே முடியாமல் போய்விடும். இது, வாழ்க்கையை சிதைத்துவிடும். இந்த விஞ்ஞானபூர்வமான உண்மைகளை எல்லாம் பெண்கள், கணவரிடம் எடுத்துக்கூறி, அவர்களை மதுவின் பிடியில் இருந்து மீட்டெடுக்கவேண்டும்" என்று, செக்ஸாலஜிஸ்டுகள் கூறுகிறார்கள்.
திருமண பந்தத்தில் கணவரின் ஆதிக்கமே தலை தூக்கி நிற்கிறது. அப்படி ஆதிக்கம் செலுத்துவது தம்பதியர் இடையே அன்பை குறைத்துவிடும். மனைவிக்கு போன் செய்யும்போது இணைப்பு பிசியாக இருந்தால் வேறொருவருடன் பேசுவதாக சந்தேகிப்பது, சமூகவலைத்தளங்களில் வேறொருவருடன் அரட்டை அடிப்பதாக சந்தேகிப்பது, நடத்தையில் குறை கூறுவது போன்றவை குடும்பத்தின் நிம்மதியை கெடுத்து விடும். எந்தவொரு சூழலிலும் மனைவி மீது கணவர் சந்தேகம் கொள்ளக்கூடாது. அந்த அளவிற்கு துணை மீது கணவர் நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். இருவருக்குமிடையேயான நம்பிக்கைத்தான் வாழ்க்கையை நிம்மதியாக்கும். கணவன்-மனைவி இருவருக்குள் சந்தேக எண்ணம் தலைதூக்கினால் உடனடியாக பேசி தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். இருவருக்கும் தனிப்பட்ட விருப்பங்கள், அபிலாஷைகள் இருக்கும். அவர்களின் தனிப்பட்ட உணர்வுகளுக்கு உரிய மதிப்பு கொடுக்க வேண்டும். ஒருவர்மீது ஒருவர் ஆணித்தரமான நம்பிக்கை வைக்க வேண்டும். அந்த நம்பிக்கையை எந்தவொரு சூழலிலும் சிதைப்பதற்கு இடம் கொடுத்துவிடவும் கூடாது. குடும்ப நலன் குறித்து எந்தவொரு முடிவு எடுப்பதாக இருந்தாலும் இருவரும் கலந்து பேச வேண்டும். வெளி இடங்களுக்கு செல்வது, ஆடை அணி வது, விருப்பமான உணவு சாப்பிடுவது, செலவு செய்வது எதுவாக இருந்தாலும் கணவர் ஆதிக்கம் செலுத்தக்கூடாது. தன் விருப்பத்தின்படிதான் மனைவி செயல்பட வேண்டும் என்று பிடிவாதம் கொள்ளக்கூடாது.
வீட்டில் கணவர் மட்டுமே ஆதிக்கம் செலுத்துபவராக இருந்தால் அந்த உறவில் நேசமும், பாசமும் குறைவாகத்தான் இருக்கும். அந்த சமயத்தில் மனைவி தன் உணர்வுகளை கணவர் புரிந்துகொள்ளும் படி பக்குவமாக பேச வேண்டியது அவசியம். அதனை கேட்கும் மனநிலையில் கணவர் இல்லாமல் இருந்தால் மன நல நிபுணரின் ஆலோசனையை நாடலாம். கணவர் தொடர்ந்து சந்தேகத்திற்கு இடமான வகையில் நடந்து கொண்டாலோ, அதிகாரம் செலுத்தினாலோ, உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தினாலோ அதற்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும். அதேவேளையில் மூன்றாம் நபரின் தலையீடு உருவாகுவதற்கும் இடம் கொடுத்துவிடக்கூடாது. தம்பதியர் ஒருவரையொருவர் எந்த அளவுக்கு புரிந்து கொள்கிறார்கள் என்பதை பொறுத்துதான் தாம்பத்ய பந்தம் வலுவாக இருக்கும். இருவருக்குமிடையே சந்தேக குணமோ, ஈகோ பிரச்சினையோ, சர்வாதிகார மனபாவமோ தோன்றுவதற்கு இடம் கொடுத்துவிடக்கூடாது. அது தாம்பத்ய வாழ்க்கையை சிதைத்துவிடும்.