ஒப்பந்த பணிக்கான தொகையை வழங்க காண்டிராக்டரிடம் ரூ.55 ஆயிரம் லஞ்சம்: பஞ்சாயத்து தலைவியின் கணவர், செயலர் அதிரடி கைது

ஒப்பந்த பணிக்கான தொகையை வழங்க காண்டிராக்டரிடம் ரூ.55 ஆயிரம் லஞ்சம்: பஞ். தலைவியின் கணவர், செயலர் கைது

சேலம் அருகே கிராம பஞ்சாயத்தில், சாலை அமைக்கும் ஒப்பந்த பணிக்கான தொகை வழங்க, லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவரின் கணவர், ஊராட்சி செயலாளரை கைது செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம், தலைவாசல் ஒன்றியம் தேவியாக்குறிச்சி ஊராட்சியில், சாலை அமைக்கும் ஒப்பந்த பணியை செந்தில்குமார் (42) என்பவர் எடுத்து செய்து வந்தார். இந்த பணிக்கான ஒப்பந்த தொகையை, ஒப்பந்ததாருக்கு வழங்க, ஊராட்சி மன்ற தலைவர் அமுதாவின் கணவர் ஜெயகுமார் (48) என்பவர், ஊராட்சி செயலாளர் சின்னசாமி (32) மூலம், ரூ.55 ஆயிரம் லஞ்சமாக கேட்டதாக தெரிகிறது.
ஆனால், லஞ்சம் தர விரும்பாத ஒப்பந்ததாரர் செந்தில்குமார், இதுபற்றி சேலம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து,  மாறுவேடத்தில் வந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருடன், ஊராட்சி மன்ற அலுவலகம் சென்ற ஒப்பந்ததாரர் செந்தில்குமார், அங்கிருந்த ஊராட்சி மன்ற தலைவர் அமுதாவின் கணவர் ஜெயக்குமார் மற்றும் ஊராட்சி செயலாளர் சின்னசாமி ஆகியோரிடம், ரசாயன பவுடர் தடவிய பணம் ரூ.55 ஆயிரத்தை வழங்கினார். அதை வாங்கிய போது, இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.