ரூ.1,500 லஞ்சம் வாங்கிய சமூக பாதுகாப்பு ஊர் நல அலுவலர் கைது
ரூ.1,500 லஞ்சம் வாங்கிய சமூக பாதுகாப்பு ஊர் நல அலுவலர் கைது 

செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெண்ணாங்குப்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் மதியழகி. தமிழக அரசின் இரு பெண்கள் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தமிழக அரசிடமிருந்து ஒரு குழந்தைக்கு ரூ. 25 ஆயிரம் வீதம் 2 குழந்தைக்கு ரூ.50 ஆயிரம் பெற விண்ணப்பித்திருந்தார். விண்ணப்பத்தை பரிந்துரை செய்ய சமூக நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஊர் நல அலுவலரான சித்தாமூர் சாய்நகர் பகுதியை சேர்ந்த பியாரி பேகம் ரூ.1,500 லஞ்சம் கேட்டார். அவர் கேட்ட பணத்தை மதியழகி தராததால் அவரது மனுவை பரிந்துரை செய்யவில்லை. இதனையடுத்து ஊர் நல அலுவலர் பியாரி பேகம் மீது செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்பு போலிசில் புகார் செய்தார். அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு இமானுவேல் ஞானசேகர் தலைமையில் இன்ஸ்பெக்டர் பிரியா, சப்-இன்ஸ்பெக்டர் சீதாபதி ஆகியோர் ரசாயனம் தடவிய ரூ.1,500 நோட்டை கொடுத்தனுப்பினர். பின்னர் அந்த பணத்தை ஊர்நல அலுவலர் பியாரி பேகம் வாங்கும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக அவரை கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.