தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி கழகம் தொழிற்கல்வி ஆசிரியர்கள் நிர்வாகிகள் மாவட்ட கல்வி அலுவலரிடம் கோரிக்கை மனு

நீதிமன்ற தீர்ப்பாணைகளை நடைமுறைபடுத்திட கோரி வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரிடம் தொழிற்கல்வி ஆசிரியர்கள் கோரிக்கை மனு
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தின் தீர்மானத்தின் அடிப்படையில்    தொழிற்கல்வி ஆசிரியர்களின் கோரிக்கைகள் மீது அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஆணைகள் வழங்கிடுமாறு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் வழியாக தமிழக அரசுக்கு அனுப்ப கோரி மனு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமையில் வேலூர் மாவட்ட செயலாளர் க.ராஜா, பொருளாளர் எம்.பாண்டுரெங்கன், மாவட்ட துணைத்தலைவர் எஸ்.சச்சிதானந்தம், மாவட்ட இணை செயலாளர்கள் டி.சண்முகம், க.வே.கிருபானந்தம், ராதாகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் டி.எல்.ஜெயபிரகாஷ் ஆகியோர் வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கு.குணசேகரன் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவினை தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையின் முதன்மைச் செயலாளர், பள்ளிக்கல்வித்துறை ஆணையர், பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொழிற்கல்வி இணை இயக்குநர் ஆகியோருக்கு அனுப்பிட கோரி மனு அளித்தனர்.மனுவில் கூறியிருப்பதாவது. சென்னை உயர்நீதிமன்ற தீர்புரையின் பேரிலும் நீதிமன்ற மேல்முறையீட்டு மனுவினை தள்ளுபடி செய்து வழங்கப்பட்ட தீர்ப்பினை ஏற்று  50% தொகுப்பூதிய பணிக்காலம் ஓய்வூதியம் பெற கணக்கிட வழங்கப்பட்ட அரசாணையில்  விடுபட்ட தொழிற்கல்வி ஆசிரியர்கள் அனைவரும்  பயன் பெறும் வகையில் தமிழக அரசு ஆணை வழங்கிட கோருகின்றோம்.
 தொழிற்கல்வி உயர்மட்ட குழுவின் தலைவர் டாக்டர் எச்.எஸ்.எஸ். லாரன்ஸ் பரிந்துரையின் படியும், தற்போது மேல்நிலைப்பள்ளியில் உள்ள கணினி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட 12.2.2019ல் வெளியிடப்பட்ட அரசாணையின் அடிப்படையிலும் மேல்நிலை தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் என்ற உச்சநீதிமன்ற தீர்புரையின்படி முதுகலை ஆசிரியருக்கு இணையான ஊதியம் உடனே வழங்கிட தமிழக அரசை கோருகின்றோம். வெவ்வேறு பாடங்களில் உயர்கல்வி பெற்றுள்ள அனைத்து வகை ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கப்பட்டு வருவதை போல மேல்நிலை தொழிற்கல்வி ஆசிரியர்கள் அனைவருக்கும் ஊக்க ஊதியம் வழங்கிட கோருகின்றோம். 
தொழிற்கல்வி ஆசிரியர்கள் பணி ஓய்வு பெற்றால் அப்பள்ளியில் தொழிற்கல்வி பாடப்பிரிவு மூடப்படும் நிலை தடுக்கப்பட வேண்டும்.
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 600 தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.  கடந்த 10ஆண்டுகளாக பெற்றோர் ஆசிரியர் கழகத்தினால் நியமிக்கப்பட்டு பணியாற்றிவரும் தொழிற்கல்வி ஆசிரியர்களை பணிவரன்முறை செய்திட கோருகின்றோம். அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தின் கீழ் 2018-19ஆம் கல்வியாண்டில் 67 மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடம் அறிமுகம் செய்து அரசாணை வெளியிட்டது போல் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடம் அறிமுகம் செய்திட தமிழக அரசை கோருகின்றோம். மெல்ல கற்கும் மாணவர்கள் தொழிற்கல்வி பாடப்பிரிவில் சேர்க்கப்பட்டு கல்வி பெற்று தொழில் பயிற்சியும் பெற்று தன்னம்பிக்கையுடன் செயல்பட ஏதுவாக முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களால் 1978ஆம் ஆண்டில் அறிமுகம் செய்துவைக்கப்பட்டு தமிழக முன்னாள் முதலமைச்சர் டாக்டர் ஜெ.ஜெயலலிதா அவர்களால் 1996ஆம் ஆண்டில் தொழிற்கல்வி உயர்மட்ட குழு அமைத்த செயல்படுத்தியதை போல்  தொழிற்கல்வி மேலும் வளர்சி பெற அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் இரண்டு தொழிற்கல்வி பாடம் கட்டாய பாடமாக அறிவிக்க வேண்டும்.
கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட முதன்மைக்கல்வி அலுவலர் கு.குணசேகரன் தமிழக அரசுக்கு அனுப்பிவைப்பதாக உறுதியளித்தார்கள். தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் சார்பில் கோரிக்கை மனுவினை வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கு.குணசேகரன் அவர்களிடம் மாநிலத் தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமையில் அளித்த போது எடுத்தப்படம் உடன் மாவட்ட செயலாளர் க.ராஜா மாவட்ட துணைத் தலைவர் எஸ்.சச்சிதானந்தம், மாவட்ட இணை செயலாளர்கள் டி.சண்முகம், க.வே.கிருபானந்தம், ராதாகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் டி.எல்.ஜெயபிரகாஷ் ஆகியோர் உடன்யிருந்தனர்