மனித வாழ்வின் வளர்ச்சிக்கு கிரகங்களின் சுழற்சி ஒரு காரணமாக அமைகின்றது என்று சொல்லி, நம் முன்னோர்கள் ஜோதிட சாஸ்திரத்தை உருவாக்கி இருக்கின்றார்கள். ஒரே நேர்கோட்டில் பல கிரகங்கள் சேரும்பொழுது எதிர்பாராத பல மாற்றங்களும், இயற்கை சீற்றங்களும் ஏற்பட்டிருக்கின்றது. 537 வருடங்களுக்கு முன்பு தனுசு ராசியில் ஆறு கிரகங்கள் ஒன்றாக இணைந்ததாக சொல்கிறார்கள். ஆனால் 1962-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தின் மூன்றாம் நாள், எட்டு கிரகங்களின் சேர்க்கை மகர ராசியில் ஏற்பட்டது. சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்ரன், வியாழன், சனி, கேது ஆகிய எட்டு கிரகங்களும் மகரத்தில் இருக்க, ராகுபகவான் மட்டும் கடகத்தில் சஞ்சரித்தார். அப்பொழுது உலக மக்கள் எல்லாம் பீதி அடைந்து, ‘உலகம் அழிந்துவிடுமோ?’, ‘இயற்கை சீற்றங்களுக்கு ஆளாகி விடுவோமோ ?’ என்று பயந்தனர். நாடெங்கிலும் இதே பேச்சாக இருந்தது. பள்ளி, கல்லூரிகள் கூட விடுமுறைகளை விட்டனர். பயத்தின் காரணமாக ஒருசில நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டன. இப்பொழுது, அதே போல் ஆறுகிரகங்களின் சேர்க்கை ஏற்படுகின்றது. 25.12.2019 மாலை 5.10 மணி முதல் 27.12.2019 இரவு 12.19 மணி வரை நெருப்பு ராசியான தனுசு ராசியில் சூரியன், சந்திரன், புதன், வியாழன், சனி, கேது ஆகிய ஆறு கிரகங்களும் சஞ்சரிக்கின்றன. காற்று ராசியான மிதுனத்தில் சஞ்சரித்து வரும் ராகுபகவான் அதைப் பார்க்கின்றார். எனவே நெருப்பிற்கும், காற்றிற்கும் உள்ள போராட்டமான அமைப்பை இந்த கோச்சார கிரகங்கள் ஜோதிட ரீதியாக நமக்கு வழங்கலாம் என்று மக்கள் நம்புகின்றார்கள். நாடெங்கிலும் இதைப்பற்றிய பேச்சே நிலவி வருகின்றது. நமக்கு என்னாகுமோ என்று ஒவ்வொருவரும் நினைக்கின்றார்கள். இருப்பினும், குருவின் சொந்த வீடான தனுசு ராசியில் இந்த கிரகச் சேர்க்கை ஏற்படுவதால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது என்றே கருதலாம். அதுமட்டுமல்லாமல் இந்த மூன்று நாட்களிலும் முக்கியமான தெய்வீக நிகழ்ச்சிகளும் இருக்கின்றன. நேற்று புதன்கிழமை அனுமன் ஜெயந்தியும், வியாழக்கிழமை அமாவாசையும் வருகின்றது. சூரிய கிரகணமும் இருக்கின்றது. வெள்ளிக்கிழமை சந்திர தரிசனம் வருகின்ற சிறப்பான நாள். எனவே இந்தக் கதிர்வீச்சினால் வரும் பாதிப்புகளை நாம் தடுத்துக்கொள்ள நமக்கு இந்த மூன்று நாட்களும் இறையருள் பெறும் நாட்களாகவும், முன்னோர் வழிபாட்டிற்கு உகந்த நாட்களாகவும் இருக்கின்றது. இந்த ஆறுகிரகச் சேர்க்கையினால் நேரும் பாதிப்புகளும், இயற்கை சீற்றங்களும் நம்மை அண்டாமல் இருக்க முன்னெச்சரிக்கையோடு இருப்பது நல்லது. குறிப்பாக கூட்டுப்பிரார்த்தனைகளின் ஆற்றல் மக்களைக் காப்பாற்றும். இந்தக் கிரகச் சேர்க்கையின் காரணமாக சூறாவளிக் காற்றுகள் அதிகம் வீசலாம். மழை,வெள்ளப் பாதிப்புகள், நிலநடுக்கங்கள் போன்றவை ஒருசில பகுதிகளில் ஏற்படலாம். ரிஷபம், கன்னி, மிதுனம், தனுசு ஆகிய ராசிகளில் பிறந்தவர்கள் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. இயற்கைச் சீற்றங்களிலிருந்து விடுபடவும், இன்னல்கள் அகலவும் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களுக்குரிய ஸ்தலங்களிலும், ஆங்காங்கு உள்ள இறைவழிபாட்டு ஸ்தலங்களிலும் கூட்டுப்பிரார்த்தனைகளை மேற்கொண்டால் எந்த நாளும் நமக்கு இனிய நாளாக அமையும். 6 கிரக சேர்க்கையால் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஏற்படும் பலன்கள் மற்றும் பரிகாரங்கள் இங்கே தொகுத்து தரப்பட்டுள்ளது. 6 கிரக சேர்க்கையால் 12 ராசிகளுக்கு ஏற்படும் பலன் என்ன? மேஷம் உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் ஆறுகிரகங்கள் ஒன்று சேருகின்றன. பிதுரார்ஜித ஸ்தானம் எனப்படும் 9-ம் வீட்டில் அந்த வீட்டிற்கு அதிபதியான குருபகவானோடு மற்ற கிரகங்கள் இணைவதால் பெரிய அளவில் உங்களுக்கு எந்தப் பாதிப்புகளும் ஏற்படாது. இருந்தாலும், ஒரே நேர்கோட்டில் இணையும் அந்தக் கிரகங்களின் ஆதிக்கத்தால் எதிர்பாராத மாற்றங்கள் திடீரென உருவாகலாம். இந்தக்காலத்தில் பெற்றோர் வழி ஆதரவு கொஞ்சம் குறையலாம். உற்றார் உறவினர்களின் பகை உருவாகலாம். பயணங்களால் பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே இந்த கிரக சேர்க்கை காலத்தில் பயணங்களைத் தள்ளி வைப்பது நல்லது. வெளிநாட்டு முயற்சிகளில் அக்கறை காட்டுவதை தவிர்க்கலாம். உத்தியோகம் சம்பந்தமான செயல்பாடுகள் திருப்தியளிக்குமா என்பது சந்தேகம் தான். சூரியனின் பார்வை 3-ம் இடத்தில் பதிவதால் சகோதரர்களால் எதிர்பாராத விரயங்கள், சச்சரவுகள் ஏற்படலாம். சனி பகை கிரகத்தோடு கூடி லாப ஸ்தானத்தைப் பார்ப்பதால் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகாமல் இருக்கலாம். கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருங்கள். நிதி சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. மூல முதற்கடவுளான ஆனைமுகன் வழிபாட்டையும், குலதெய்வ வழிபாடுகளையும் முறையாகச் செய்வதோடு, புதன்கிழமை அனுமன் ஜெயந்தி வருவதால் அனுமன் வழிபாட்டையும், வியாழக்கிழமை அமாவாசை என்பதால் முன்னோர் வழிபாட்டையும், வெள்ளிக்கிழமை சந்திர தரிசனம் என்பதால் சந்திரன் வழிபாட்டையும் மேற்கொண்டால் இந்த மூன்று நாட்களிலும் ஏற்படும் முட்டுக்கட்டைகளைத் தவிர்க்கலாம். ரிஷபம் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் ஆறுகிரகங்கள் வலுப்பெறுகின்றன. நீங்கள் மிகமிக கவனத்தோடும், அதிக விழிப்புணர்ச்சியோடும் செயல்பட வேண்டிய நேரமிது. மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். எதிர்மறைச் சிந்தனைகள் அலைமோதும். இருப்பினும், குருவின் வீட்டில் இந்த கிரக சேர்க்கை ஏற்படுவதால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. இந்தக் கூட்டுக்கிரக அமைப்பினால் ஆரோக்கியத் தொல்லைகள் அதிகரிக்கும். உஷ்ணாதிக்க நோய்கள் உருவாகலாம். எலும்பு, நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், ஒவ்வாமை, விஷக்காய்ச்சல்கள், தூக்கமின்மை போன்ற பாதிப்புகள் வரலாம். கூர்மையான உபகரணங்கள், மின்சாரம் ஆகியவற்றை கையாளும்போது எச்சரிக்கை தேவை. 2-ல் ராகு இருப்பதால் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகி மகிழ்ச்சியைக் கொடுக்கும். சொத்துக்களாலும், சொந்தங்களாலும் தொல்லையுண்டு. இக்காலத்தில் பிறருக்கு நன்மை செய்தாலும் அது தீமையாக முடியலாம். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்யுங்கள். வாக்குவாதங்கள் உங்கள் வளர்ச்சியைத் தடுக்கும். பிறருடைய பேச்சை நம்பி செயல்படுவதால் பிரச்சினைகள் உருவாகலாம். பயணங்களைக் கூடத் தள்ளி வைப்பது நல்லது. குறிப்பாக இரவு நேரப் பயணங்களை தவிர்க்கலாம். எப்படிப்பட்ட கிரக அமைப்புகள் இருந்தாலும், இடர்பாடுகளிலிருந்து விடுபட வேண்டுமானால் இறைவழிபாடு அவசியம் தேவை. எனவே முழு நம்பிக்கையோடு முருகப்பெருமான் வழிபாடும், புதன்கிழமையன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி வருவதால் அனுமன் வழிபாடும், வியாழக்கிழமை அமாவாசை என்பதால் முன்னோர் வழிபாட்டையும், இஷ்ட தெய்வம் மற்றும் குலதெய்வ வழிபாடுகளையும் முறையாக மேற்கொண்டால் பாதிப்புகளிலிருந்து விடுபட்டு நல்ல பலன்களைக் காணலாம். மிதுனம் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் ஆறுகிரகங்கள் வலுப்பெறுகின்றன. இக்காலத்தில் மிகமிக கவனத்தோடு செயல்பட வேண்டும். காரணம் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன், புதன், வியாழன், சனி, கேது, சந்திரன் ஆகிய ஆறு கிரகங்களும் உங்கள் ராசியையே பார்க்கின்றார்கள். பாம்புகிரகமான ராகு உங்கள் ராசியிலேயே உலா வருகின்றார். சூரியன்-சனி சேர்க்கையும், சூரியன்-கேது சேர்க்கையும் மிகமிக பாதிப்புகளை உருவாக்கும் விதத்தில் இருக்கின்றது. இந்தக்காலத்தில் காரியத்தடைகள் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை வழியே பிரச்சினைகள் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். இந்த மூன்று நாட்களும் மனகட்டுப்பாடோடு இருப்பது நல்லது. தனாதிபதி சந்திரன், அஷ்டமாதிபதி சனியோடு கூடியிருக்கின்றார். சகோதர- சகாய ஸ்தானாதிபதி சூரியனும் பகைக்கிரகமான சனியோடும் கேதுவோடும் இணைந்திருக்கின்றார். எனவே எதையும் அதிகாரத்தால் சாதிக்க இயலாது. அன்பால் சாதிக்கலாம். வீண்பிடிவாதத்தைத் தவிர்க்கவும். வீடுமாற்றங்கள், உத்தியோக மாற்றங்கள், ஏமாற்றம் போன்றவற்றை சந்திக்க நேரிடும். சுவாசப் பிரச்சினைகள், தண்டுவடப் பிரச்சினைகள், அறுவை சிகிச்சைக்கான அறிகுறிகள் தோன்றலாம். இக்காலத்தில் குருவை வழிபடுவதோடு நரசிம்மர் வழிபாட்டையும் மேற்கொள்ளவேண்டும். சர்ப்பகிரகமான ராகு-கேதுக்களின் ஆதிக்கத்தில் சிக்கி இருப்பதால் விஷ ஜந்துக்களால் தொல்லைகள் வரலாம். எனவே, சிதறுகாய் உடைத்து செய்யும் விநாயகர் வழிபாடு பலன்தரும். புதன்கிழமை அனுமன் வழிபாடும், வியாழக்கிழமை முன்னோர் வழிபாடு மற்றும் குலதெய்வ வழிபாடுகளையும் மேற்கொள்வதன் மூலம், வந்த பிரச்சினைகள் வாசலோடு நிற்க வழிபிறக்கும். கடகம் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் 6-கிரகங்கள் சேர்க்கை நடைபெறுகிறது. இதனால் எதிர்பாராத மாற்றங்கள் இல்லம் தேடி வரும்.வருமானம் வந்தாலும், வந்த மறுநிமிடமே செலவாகி விடும். மனநிம்மதி குறையும். ஒரு சிலருக்கு கடன்சுமை உருவாகும். அலைச்சலைக் குறைத்துக் கொள்ளுங்கள். அகால நேரத்தில் உணவு அருந்துவதை தவிர்த்து விடுங்கள். உழைப்பிற்கேற்ற பயன் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, உடனிருப்பவர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள், சினத்தை தவிர்த்திடுங்கள். மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம். பிறரை நம்பி ஏமாறும் வாய்ப்பும் உள்ளது. எனவே எதிலும் நிதானம் அவசியம். வாழ்க்கைத் துணைவழியே அனுசரித்து செல்வது நல்லது. வாக்கு வாதங்களை தவிர்க்கவும். உங்கள் ராசிநாதன் சந்திரன் 6-ல் இருப்பதால் தனக்குத் தானே எதிரியாகும் சூழ்நிலை உண்டு. உங்கள் செயலே உங்களுக்கு பாதிப்புகளை உண்டாக்கலாம். 6-ம் இடம் ஜீவன ஸ்தானமாகவும் கருதப்படுவதால் உத்தியோகம் மற்றும் தொழிலில் திடீர் மாற்றங்கள் உருவாகும். எதிலும் கையெழுத்திடும் போது கவனம் செலுத்துங்கள்.அலைபாயும் மனதை அடக்கிக் கொள்ளுங்கள். வரவு-செலவுகளை கவனித்தால் பங்குதாரர்களால் வரும் ஏமாற்றத்தை தவிர்க்க இயலும். எத்தனை பாதிப்புகள் இருந்தாலும் அதிலிருந்து விடுபட வைப்பது இறை வழிபாடு என்பதால் புதன்கிழமை அனுமன் வழிபாட்டையும், வியாழக்கிழமை முன்னோர் வழிபாட்டையும், வெள்ளிக்கிழமை துர்க்கை வழிபாட்டையும், குல தெய்வம் மற்றும் இஷ்ட தெய்வங்களையும் வழிபடுவதன் மூலம் துன்பங்களில் இருந்து விடுபட இயலும். இந்த மூன்று நாட்களிலும் முறையான வழிபாடும், நிதானமாக செயல்படுவதும் தான் உங்களுக்கு நிம்மதியை வரவழைத்துக் கொடுக்கும். சிம்மம் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் 6 கிரகங்களின் சேர்க்கை ஏற்படுகிறது. இதன் விளைவாக புத்திர ஸ்தானம், பாக்கிய ஸ்தானம் எனப்படும் இடத்தில் கிரகங்கள் கூடுவதால், மனக்குழப்பங்களும், பிரச்சினைகளும் கொஞ்சம் அதிகரிக்கலாம். குறிப்பாக பஞ்சம ஸ்தானத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன், தனலாபாதிபதி புதன், 6,7-க்கு அதிபதியான சனி, விரயாதிபதி சந்திரன் மற்றும் கேது ஆகியவை கூடுவதால், அவைகளின் ஆதிபத்தியத்தில் நடைபெறும் செயல்பாடுகளில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு தொல்லை ஏற்படுகிறதே என்று கவலைப்படுவீர்கள். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு திடீரென பொறுப்புகள் மாற்றப்படலாம். பிள்ளைகளால் பண விரயங்கள் ஏற்படலாம். சகோதர உறவுகளில் கூட விரிசல் ஏற்படலாம். குடும்பத்தில் மன நிம்மதி குறையும். வாழ்க்கை துணை வழியே பிரச்சினைகள் அதிகரிக்கும். வாங்கிய சொத்துக்களில் சில பிரச்சினைகள் உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், ‘எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க முடியவில்லையே’ என்று கவலைப்படுவர். ஆரோக்கியத்தை பொறுத்தவரை, உடலின் இடது பாகத்தில் உபாதைகள், நரம்பு, எலும்பு சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் உருவாகலாம். அலட்சியம் செய்யாமல் ஆரம்பத்திலேயே கவனித்துக் கொள்வது நல்லது. புதன்கிழமையன்று அனுமன் ஜெயந்தி என்பதால் அனுமன் வழிபாட்டையும், வியாழக்கிழமை அன்று அமாவாசை என்பதால் முன்னோர் வழிபாட்டையும் மேற்கொள்வதோடு, குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வங்களையும் வழிபட்டால் குழப்பங்களிலிருந்து விடுபட இயலும். கூட்டுக் கிரக சேர்க்கையால் நன்மைகளையும் காண இயலும். கன்னி உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் 6 கிரகங்களின் சேர்க்கை ஏற்படுகிறது. இதன் விளைவாக சுக ஸ்தானம் எனப்படும் 4-ம் இடம் பலமிழக்கிறது. எனவே இந்த கிரக சேர்க்கை காலத்தில் மிக மிக கவனத்தோடு செயல்பட வேண்டும். குறிப்பாக ஆரோக்கியத்தில் அதிக அக்கறை
• Bharathaidhazh